கோவை மாநகரில் புகழ்பெற்ற பல திருத்தலங்கள் உண்டு. வரலாற்றில், இலக்கியத்தில் மற்றும் பாடல் பெற்ற திருக்கோயில்கள் நிறைய உண்டு. அதே சமயம் ஆற்றல் மிகுந்த, கேட்டதை அருளும் கோவில்களும் உண்டு. அந்த வரிசையில் கோவை மாநகர், கவுண்டம்பாளையத்தில் செட்டியாரம்மாள் தோட்டம் என்ற பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் திருக்கோயில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
சுமார் 17 ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தில் புற்று ஒன்று இருந்தது. இந்த புற்றுக்கு இரவு நேரத்தில் சர்பம் ஒன்று வந்து போய் உள்ளது. இதை கண்ணுற்ற இந்த ஊர் பெண்கள், ஊர் பெரியவர்களிடம் இந்த இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
ஊர் பெண்களின் கோரிக்கை நிறைவேறி, ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் எழுந்தருளினார். பொதுமக்கள் பக்தி பரவச கடலில் மூழ்கி அம்மன் அருள் எனும் முத்து குளிக்க துவங்கினர். இதனிடையே இந்த கோயில் பாதையை சற்று அடைத்திருந்தது.இதனால் சற்றே பாதை விட்டு பின்னோக்கி அமைப்பதற்கான ஊர் பெரியவர்களும், பொதுமக்களும் தீர்மானித்து அதன்படி செயல் வடிவத்திற்குள் இறங்கினர்.இந்த நோக்கத்தை நிறைவேற்றும் முதல் படியாக முப்பது லட்சம் செலவில் காலியிடம் வாங்கப்பட்டது.
இதனை செவிமடுத்த ஊர் பெரியோர்களான கே.ஆர்.கிருஷ்ணசாமி, ராமசாமி மேஸ்திரி உட்பட 14 பேர் கோவில் கட்டுவதற்கான முயற்சியில் இறங்கினர். தெய்வப்பற்றும், ஆன்மீக சிந்தனையும் திருப்பணியாற்றுவதே பிறப்பெடுத்த தற்கான பயன் என்ற நுண்ணறிவும், ஊர் மக்களின் தெய்வீக நம்பிக்கை என்பதாலும் ஊர் பெரியவர்களான இந்த 14 பேரும் கடும் உழைப்பும், பெரும் முயற்சியும், பொருளாதாரத்தையும் வழங்கி இங்கு சிறிய அளவில் கோயில் எழுப்பினர்.

ஊர் பெரியவர்களான கிருஷ்ணசாமி, ராமசாமி மேஸ்திரி, உட்பட 14 பேர் மற்றும் ஊர் பொதுமக்களின் ஒத்துழைப்போடு இந்த நிலம் வாங்கப்பட்டது.
இந்த கட்டுமான திருப்பணிக்காக சுமார் 40 லட்சம் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கோயில் கமிட்டியின் அறங்காவலராக கே. ஆர். கிருஷ்ணசாமி, கவுரவ ஆலோசகராக கே.என்.ஜவஹர் உள்ளனர். அறங்காவலர் குழுவில் சி.என்.முத்து, எம். சின்னசாமி, எஸ். கிருஷ்ணமூர்த்தி, முருகேசன், சி.எல்.விஜயன், ஆர். ராஜ்குமார், மாரிமுத்து, மலைராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பூமி பூஜை
இந்தக் கோயிலின் பூமிபூஜை விழா கார்த்திகை மாதம் 25ம் ஞாயிற்றுக்கிழமை (11.12.2022) அன்று காலை 10.30 மணிக்குமேல் 11.30 மணிக்குள் சிறப்பாக நடைபெற்றது. பூமிபூஜையை ஸ்ரீ ஸ்ரீ சுபஸ்ரீ சதீஷ்குருக்கள் நடத்திவைத்தார்.
மேலும் திருப்பணி குழுவில் பி.தேவிதாசன், லிங்க பெருமாள், சங்கர் கணேஷ், செல்வராஜ், தெய்வராஜ், மணிகண்டன், பழனிச்சாமி, முருகன், விவேக், பிரகாஷ், நாகதரணிதரன், பாபு, முருகானந்தம், ரங்கநாதன், அசோக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அது மட்டு மின்றி நூற்றுக்கணக்கான பொதுமக்களும் இந்த திருப்பணியில் இணைந்துள்ளனர்.