தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை, வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் மாற்றுத்திறனாளிகளின் திருமணத்தில் மணமக்களுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டத்தை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
கடந்த 2021-2022 சட்டமன்ற மானியக்கோரிக்கையில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் திருக்கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. மேலும் திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி திருக்கோயில்கள் மற்றும மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணங்கள் நடைபெற்று வருகின்றது.
2022 – 2023 ஆம் ஆண்டு சட்டமன்ற மானியக்கோரிக்கையில் திருக்கோயில்களில் மற்றும் திருக்கோயிலுக்குச் சொந்தமான மண்டபங்களில் நடக்கும் மாற்றுத்திறனாளிகள் திருமணங்களில் மணமக்களுக்கு திருக்கோயில் சார்பாக புத்தாடைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் சென்னை, வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் மாற்றுத்திறனாளிகள் மணமகன் பி.சிவா மற்றும் மணமகள் ஆர். சுகந்தி ஆகியோர்களுக்கு திருமணம் நடைபெற்று புத்தாடைகள் வழங்கப்பட்டது.
அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசியதாவது, முத்தமிழறிஞர் கலைஞரின் வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். மாற்றுத்திறனாளிகள் திருமணம் கடந்த ஆண்டு முதல் திருக்கோயில்கள் மற்றும் திருக்கோயில்களுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் திருமணங்களுக்கு கட்டணம் இல்லாமல் நடைபெற்று வருகிறது. கடந்த சட்டப்பேரவை மானிய கோரிக்கை அறிவிப்பின்படி தற்போது வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் திருமணத்தில் மணமக்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. வரும் காலங்களில் இத்திட்டம் திருக்கோயில்களில் சிறப்பாக செயல்படுத்தப்படும் என்றும். செயல்படுத்த தேவையான நிதியினை திருக்கோயில் வரவு செவவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.கருணாநிதி, இணை ஆணையர் திரு.ந.தனபால் , வடபழநி துணை ஆணையர் திருமதி. முல்லை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வெளியீடு : இணை இயக்குநர் / மக்கள் தொடர்பு, இந்து சமய அறநிலையத்துறை, சென்னை-34.